அடுத்தவர் சொல்வதை முழுவதுமாகக் காது கொடுத்துக் கேட்பது ஒரு அற்புதமான கலை. வார்த்தைகளை மட்டும் கேட்பதல்ல அது. வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள மனதைப் புரிந்து கொள்ளும் கலை அது. பாதி மனதை வேறெங்கோ அலைய விட்டு, சொல்வதை அரைகுறையாகக் கேட்பதல்ல அது. ஒருவர் பேசப் பேச இடைமறித்து நம் கருத்தைச் சொல்லி, பின் நம் அனுபவங்களைச் சொல்லி, அவர் சொல்ல வந்ததை மறக்கடிப்பதல்ல அது. முழு மனதுடன் பொறுமையாக, அமைதியாகக் கேட்கும் கலை அது. ஆனால் இந்தக் கலை இன்று அபூர்வமாகி விட்டது. அதற்குக் காரணம் இரண்டு.
முதலாவதாக இன்றைய மனிதர்களில் பெரும்பாலோருக்கு மிகவும் பற்றாக்குறையாக இருப்பது நேரமே. அவசர வாழ்க்கை ஓட்டத்தில் எதற்குமே அதிக நேரம் இருப்பதில்லை. கிடைக்கும் சிறிது நேரத்தை டெலிவிஷன் எடுத்துக் கொள்கிறது. வார்த்தைகள் தந்தி வாசகங்களாக மட்டுமே குடும்பத்தினுள்ளே பேசப்படுகின்றன. அதற்கு மேல் சொல்லவும் நேரமில்லை.. கேட்கவும் நேரமில்லை.
அடுத்தது மனப்பற்றாக்குறை. தன்னையே மையப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை வாழும் மனநிலை. அடுத்தவர்களை அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ தேவை இருப்பதாக எண்ணாத மனோபாவம். இதில் இரண்டு வகை உண்டு. சிலர் தாங்களும் தங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தவர்கள் பற்றி கேட்கும் ஆர்வமும் இவர்களுக்கு இருக்காது. இதில் இரண்டாவது வகை தங்களைப் பற்றியே பேசி ஆனந்தப்படும் மனிதர்கள். இவர்களுக்கு தாங்கள் பேசுவதை அடுத்தவர்கள் கேட்க வேண்டும். அடுத்தவர்கள் பேச ஆரம்பித்தாலோ போரடித்து விடும்.
இந்த இரண்டு பற்றாக்குறைகளையும் விட்டொழிக்கும் போதே கேட்கும் கலை கைகூடுகிறது.. மனிதர்கள் தீவுகள் அல்ல. தீவுகளாக அவர்கள் வாழ்ந்து விடவும் முடியாது. குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவரது மகிழ்ச்சியும், துக்கமும் அடுத்தவரைப் பாதிக்காமல் இருக்க முடியாது. குடும்ப மற்றும் சமூக நலனும், மகிழ்ச்சியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே முக்கியமாக இருக்கிறது. அப்படி புரிந்து கொள்வது ஒருவர் சொல்வதை மற்றவர் காது கொடுத்து மனமாரக் கேட்கும் போதே சாத்தியமாகிறது.
முக்கியமாக ஒருவர் பிரச்னைகளின் கனம் தாளாமல் தள்ளாடும் போது இந்த 'கேட்கும் கலை' பேருதவியாகி விடுகிறது.
நம்மில் ஒவ்வொருவரும் கூட ஒருசில சந்தர்ப்பங்களில் பொறுமையான காதுகளுக்காக ஏங்கியிருக்கக் கூடும். மனச்சுமைகள் அதிகமாகி விடும் சில நேரங்களில் அவற்றை இறக்கி வைக்கவும், ஆறுதல் பெறவும், நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கும் நல்ல இதயங்களைத் தேடி நிற்கும் பலவீனமான தருணங்கள் நமக்கும் வருவதுண்டு. அந்த நேரத்தில் நமக்கு ஒருவர் செய்யக் கூடிய மிகப் பெரிய உதவி நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதே. பிற்பாடு நாம் சுதாரித்துக் கொண்ட பின் நம் பிரச்சினைகளைத் தெரியப்படுத்தி விட்டோமே, சொல்லி இருக்கத் தேவையில்லையோ என்று நம்மில் சிலர் நினைத்தாலும் கூட அந்த இக்கட்டான நேரத்தில் அந்த ஒருவரிடம் உள்ளதைக் கொட்டி நாம் பெற்ற ஆசுவாசத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
எனவே காது கொடுத்துக் கேளுங்கள் நண்பர்களே. மேல் போக்காக அல்லாமல் முழு கவனத்தையும் வைத்து சொல்வதைக் கேளுங்கள். குடும்பத்தினுள்ளேயும், வெளியேயும் பிரச்னைகளால் நிரம்பி வழியும் மனிதர்கள் ஏதாவது சொல்ல முன் வந்தால் தயவு செய்து நேரம் ஒதுக்கி பொறுமையாகக் கேளுங்கள். முடிவில் அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள். அப்படி இல்லையென்றாலும் நல்ல மனதுடன் ஆத்மார்த்தமாக "எல்லாம் சரியாகி விடும், கடவுள் கண்டிப்பாக ஏதாவது வழி விடுவார்" என்று நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லுங்கள். பல நேரங்களில் அதை விடப் பெரிய உதவி வேறு இருக்க முடியாது.
Nice one, ain't it?
Share your thoughts.
Charu